Thursday, June 01, 2006

என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள் - 2

இந்த வலைப் பதிவை ஆரம்பித்தது என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் எனக்குள் இருக்கும் காதலை பற்றிய தேடலின் ஆர்வத்திற்கு தீனி போட்டு கொள்ளவும்தான்.

இந்த இடுகையில் நான் சொல்லப் போவது என் தேடல் ஆர்வத்தை அதிகரித்த ஒரு குழப்பமான காதலைப் பற்றி.

காதல் எனபது என்ன? ஒருவர் மேல் உள்ள ஈர்ப்பா? ஈர்ப்பாக மட்டும் இருக்க முடியாது. ஏனெனில் நாம் பலர் பால் ஈர்க்கப் படுகிறோம் அனைத்துமே காதலாக முடியாதல்லவா? ஆக இந்த வட்டம் மிக பெரியதா உள்ளதால் சிறிய வட்டம் ஒன்று வரைவோம். ஈர்ப்புடன் ஒத்த குணாதிசியங்கள் இருப்பின் காதல் ஆகுமா? இல்லை நாம் ஈர்ப்பு கொண்ட பலரிடம் நாம் ஒத்த குணம் இருப்பதைக் காண்கிறோம். இதுவும் பெரிய வட்டமாகவே இருக்கிறது.மேலும் இந்த வட்டத்தை சுருக்க முடியமா?

மேலே நான் செய்ய முயன்றது போல் வட்டத்தை சுருக்கி கொண்டே வந்து இந்த இருவருக்குள் மட்டுமே காதல் வரும் என்று நம்மால் கூறவே இயலாது. காதல் என்பது எந்த இருவருக்குள் வரும் என்று நாம் கேள்வி கேட்டால் நம்மால் அறிவியல் பூர்வமாக பதில் சொல்லவே இயலாது.

சரி எந்த இருவருக்குள் காதல் வரும் என்று வெளி ஒரு நபர்தான் கூற முடியாது காதல் செய்பவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியும் யாரை காதலிக்க வேண்டும் என்று? உங்களுக்கு இரண்டு பேரைத் தெரியும் இருவருமே உங்களை காதலிக்கிறார்கள். நீங்கள் யாரைக் காதலிக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்வீர்கள். இருவர் பேரிலும் உங்களுக்கு ஈர்ப்பு உள்ளது. இருவருமே உங்கள் குணங்களுக்கு ஒத்துப் போகும் தன்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி நாம் நினைக்கும் அனைத்து விசயங்களுமே இரண்டு பேரிடம் ஒத்துப் போனால் என்ன செய்வீர்கள்? எவ்வளவு சுருக்கியும் உங்கள் வட்டத்திற்குள் இருவர் இருந்தால் என்ன செய்வீர்கள்?

என்னடா தன்னைச் சுற்றி நடந்த காதல் கதைகளைச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் பொறுமையா இருங்க ஏனெனில் நான் கூறப் போகும் காதலில் கதையை விட கேள்விகளே அதிகம்.

சரி கதைக்குச் செல்வோம். இந்தக் கதையில் மூன்று கதாபாத்திரங்கள் நாயகி பெயர் குழலி, ஒரு நாயகனின் பெயர் செல்வன், மற்றொரு நாயகன்.

நாயகி 10 வது படிக்கும் சமயம் இருந்தே செல்வனுக்கு பழக்கம். நாயகியின் குடும்பத்தில் பல பிரச்சனைகள். நாயகியின் தந்தை ஒரு மாதிரியானவர் குடிப் பழக்கம் மற்றும் சில மோசமான பழக்கங்கள். இள நிலைப் பட்டப் படிப்பு முடிக்கும் வரை நாயகி 9 மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் வரா விட்டால் திட்டு விழுகும், விடுமுறை நாளில் வெளியில் போக இயலாது. இப்படி நம் நாயகிக்கு பல தொல்லைகள் வீட்டில். இப்படிப் பட்ட நம் நாயகிக்கு ஒரே ஆறுதல் நம் செல்வம்தான்.

இந்த பழக்கம் காதலாக கனிய சில காலங்களே பிடித்தது. இந்தச் சூழ்நிலையில் நம் செல்வனுக்கு அரபு தேசம் சென்று வேலை செய்யும் வாய்ப்பும் நம் நாயகிக்கு தன் வீட்டை விட்டு விடுதியில் தங்கி படிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கா விட்டால் இந்தக் கதையை நான் எழுத இருக்க வேண்டியதில்லை.

ஆக நம் நாயகி தன் வாழ்க்கையில் முதன் முறையாக தன் வீட்டை விட்டு வெளியில் சென்று படிக்கவும், விடுதியில் தங்கவும் வாய்ப்பு கிடைத்தது.

நம் நாயகிக்கு இந்தச் சுதந்திரம் மிகவும் பிடித்திருந்தது. அதுவும் அவள் சென்ற சூழ்நிலை ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் மிகவும் நட்பாக பழகும் ஒரு சூழலாக அமைந்ததது.

ஒன்றாக சேர்ந்து படம் செல்வது, ஒன்றாக உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பது என்று பல சுதந்திரமான விசயங்கள் நம் நாயகிக்கு பிடித்திருந்தது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் நம் நாயகிக்கு சொக்கனுடன் நட்பு ஏற்பட்டது. நம் நாயகியின் காதல் கதை உட்பட அனைத்து விசயங்களையும் சொக்கன் அறிந்து வைத்திருந்தான்.

ஒன்றாக சினிமா செல்வது, காலை உணவில் இருந்து இரவு உணவு வரை இருவரும் ஒன்றாக சாப்பிடுவது என்று இருவரின் நட்பும் விரிவடைந்தது.

இந்த மாதிரி சூழ்நிலையில் நம் சொக்கனின் மனது தடுமாற ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இருவரும் சேர்ந்தே கூட செல்வத்திடம் சாட் செய்துள்ளனர். ஆனால் இப்பொழுது நம் நாயகி செல்வனுடன் சாட் செய்யும் பொழுதோ அல்லது போனில் பேசும் பொழுதோ தனக்கு எரிச்சல் உண்டாவதை உணர்ந்தான்.

தன்னைவிட செல்வன் எந்த விசயத்தில் உயர்ந்து போய் விட்டான் என்று தன் மனதிற்க்குள்ளரே விவாதம் செய்ய ஆரம்பித்தான். மனதில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை ஒரு நாள் வெடித்து சிதற தானும் நாயகியை காதலிப்பதாக ஒரு நாள் கூறிவிட்டான்.

இதனைக் கேட்டு ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்த நாயகி சொக்கனுடன் பேசி இருவரும் சில காலம் பேசாமல் இருப்பதே நலம் என்று முடிவு செய்தனர். சொக்கனும் தான் செய்வது சரியல்ல என்று தோன்றியதால் சில காலம் பிரிந்தே இருக்கலாம் என்று முடிவு செய்தான்.

பிரிவு எந்தக் காதலை மறக்கவோ பிரிக்கவோ உதவி இருக்கிறது. நம் நாயகிக்கு இந்தப் பிரிவில் எதோ தொலைத்தது போன்றே ஒரு உணர்வு. இத்தனை காலம் சேர்ந்தே இருந்து விட்டதால் பிரிந்தும் இருக்க முடியவில்லை. ஆனால் சொக்கனுடன் பேசவும் இயலாது என்ன செய்ய முடியும்?

இந்த இடத்தில் நம் நாயகி தன்னுடைய முடிவாக ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்று முடிவெடுத்து சொக்கனுடன் தன் நட்பை முறித்துக் கொண்டால். சொக்கனும் தான் செய்வது தவறு என்ற உணர்வினாலோ என்னவோ இந்த விசயத்தை அத்துடன் விட்டு விட்டான்.

ஆனால் அவர்களுக்குள் இருந்தது வெறும் நட்பு மட்டும் அல்ல என்று மட்டும் எனக்கு தெரியும். செல்வன் என்று ஒருவன் இல்லாவிட்டால் கண்டிப்பாக நாயகியும் சொக்கனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி இருப்பாள். அவர்கள் கல்லூரி முடித்து கடைசியாக இருவரும் பிரியும் சமயம் இருவரும் இருந்த நிலையை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இதுதான் எனக்குள் இந்தக் கேள்வியை எழுப்பியது. யாருக்கு யார் என்று எப்படித் தீர்மானிக்க முடியும்? காதல் யார் மேல் கொள்வது என்று எதனை வைத்து நாம் தீர்மானம் செய்ய முடியும்? எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்....